புதுடெல்லி: வருகிற 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை இந்தியா – வங்கதேசம் இடையே எல்லை தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்தியாவும் வங்கதேசமும் எல்லைப்பாதுகாப்பு படைகளுக்கு இடையே ஆண்டுக்கு இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. இதில் எல்லைதாண்டிய குற்றங்களுக்கு எதிராக போராடுவது, ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைள் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தரப்பினரும் விவாதிப்பார்கள். கடந்த ஆண்டு ஜூன் மாதம் டெல்லியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனை தொடர்ந்து வருகிற 5ம் தேதி இந்தியா-வங்கதேசம் இடையேயான இயக்குனர் ஜெனரல் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. டாக்காவின் பில்கானாவில் 9ம் தேதி வரை நடக்கும் இந்த பேச்சுவார்த்தையில் எல்லைப்பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரல் நிதின் அகர்வால் தலைமையிலான பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். வங்கதேசம் சார்பில் அந்நாட்டின் எல்லை பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரல் முகமது அஸ்ராபுசாமான் சித்திக் தலைமையிலான குழு பங்கேற்கிறது.