நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் கீரைக்கொல்லைத்தெருவை சேர்ந்தவர் சரோஜா(67). கணவர் இறந்ததால் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை சென்னையில் உள்ள மகன் கோவிந்தராஜ் தாயை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த கோவிந்தராஜ் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களை தொடர்பு கொண்டு தனது தாயை பார்க்கச் சொன்னார்.
இதையடுத்து அவர்கள் சரோஜாவின் வீட்டிற்கு சென்று கதவை தட்டினர். கதவை திறக்காததால் சந்தேகமடைந்து கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்றனர். அப்போது சரோஜா படுக்கையறையில் தலையணையால் அமுக்கி கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது. அவர் அணிந்திருந்த 3 பவுன் செயின், தோடு கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.