சாத்தூர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் இருந்து மதுரை செல்லும் ரயில்பாதை உள்ளது. இதில் தண்டவாளத்தை சிலிப்பர் சிமென்ட் கட்டையுடன் இணைக்கும் இரும்பு கிளிப்களை, நேற்று முன்தினம் மர்மநபர் சம்மட்டி வைத்து அடித்து சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு 350 கிளிப்களை திருடி சென்றுள்ளார். இரும்பு கிளிப்கள் திருடிய பாதை அவசர தேவைக்கு மட்டுமே பயன்படுத்தக் கூடியது. இதில் பெரும்பாலும் ரயில்கள் செல்வதில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக தூத்துக்குடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து கிளிப்களை திருடிச்சென்ற மர்ம நபர் யார், ரயிலை கவிழ்க்கும் நோக்கில் திருடினாரா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மர்ம நபர் இரும்பு கிளிப்புகளை திருடும் காட்சியை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.