ஒரத்தநாடு, ஏப்.26: ஒரத்தநாடு அருகே ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரின் வீட்டை உடைத்து ரூ.13 திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஊரணிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சாமிக்கண்ணு (60). இவர் கடந்த மாதம் அறந்தாங்கி காவல் நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று திருவோணம் அருகே உள்ள ஊரணிபுரம் கிராமத்தில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.
கடந்த 22ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவலர் குடியிருப்பில் இருந்த தனது வீட்டு உபயோக பொருட்களை எடுப்பதற்காக மனைவியுடன் சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஊரணிபுரத்தில் உள்ள வீட்டின் பின்பக்க கதவினை உடைத்து படுக்கை அறையில் உள்ள பெட்டிக்கு கீழ் வைத்திருந்த 13 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றனர். தொடர்ந்து வீட்டில் எங்கேயும் பணம், நகை உள்ளதா என பீரோவை உடைத்து துணிமணிகள் மற்றும் உடமைகளை கலைத்து போட்டிவிட்டு சென்றுள்ளனர்.
மறுநாள் காலையில் வீட்டிற்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் சாமிக்கண்ணு வீடு முன்பக்கம் மற்றும் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக திருவோணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் வந்து சோதனை நடத்தினர். இதுகுறித்து சாமிக்கண்ணு கொடுத்த புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.