மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே பாகுபலி யானை காரை ஆக்ரோஷமாக விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் கோடை வெயிலின் உக்கிரத்தால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வருவது வாடிக்கையாகிவிட்டது. இவ்வாறு அடிக்கடி வரும் ஒற்றை யானைக்கு மக்கள் பாகுபலி என பெயரிட்டு அழைத்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் தண்ணீர் அருந்திய ‘பாகுபலி’ யானை வனத்திலிருந்து வெளியேறி சமயபுரம் வழியாக சாலையை கடக்க முயன்றது.
அப்போது அந்த வழியாக காரில் வந்தவர்கள் யானையை பார்த்தவுடன் காரை நிறுத்தினர். அப்போது பாகுபலி யானை ஆக்ரோஷமாக பிளிறியபடியே காரை விரட்டியது. இதனால், அதிர்ச்சியடைந்த கார் டிரைவர் காரை வேகமாக ஓட்டி சென்றதால் காரிலிருந்த 3 பேர் உயிர் தப்பினர். இதைத்தொடர்ந்து யானை மேட்டுப்பாளையம் – வனபத்ரகாளியம்மன் கோயில் பிரதான சாலையில் சென்று நெல்லிமலை வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் சமயபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.