சென்னை: மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உத்தரப் பிரதேசத்தின் பாஜ எம்பியான பிரிஜ் பூஷன் சரண் சிங், தேசிய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பொறுப்பு வகித்தார். இவரால் ஒரு சிறுமி உட்பட பத்துக்கும் மேற்பட்ட மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக உலக சாம்பின்ஷிப் பதக்கம் வென்ற வினேஷ் போகத், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, ஷாக்ஷி மாலிக் உட்பட சுமார் 10க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்திய நாட்டிற்காக உலக அரங்கில் மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வாங்கிக் குவித்த மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜ எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இவர்களின் ரத்தக் கண்ணீருக்கு ஒன்றிய அரசு பதில் கூறியே தீரவேண்டும்.