மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர் வெயில் முத்துவுக்கு ஐகோர்ட் கிளை ஜாமீன் வழங்கியது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த 2020ம் ஆண்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினர் துன்புறுத்தியதில் உயிரிழந்தனர். இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ், பிரான்சிஸ் என 9 பேரை சிபிஐ காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மதுரை மாவட்ட முதலாவது நீதிமன்றத்தில் விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கயத்தாறு பகுதியைச் சேர்ந்த காவலர் வெயில் முத்து, தனது மகளுக்கு 7ம் தேதி பூப்புனித நீராட்டு விழா இருப்பதால் இடைக்கால ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த மனு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவலர் வெயில் முத்துவுக்கு 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இன்று மாலை 6 மணி முதல் வரும் 9ம் தேதி மாலை 6 மணி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டுள்ளார். சிபிஐ விசாரித்து வரும் இவ்வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள், காவலர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சுமார் 3 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றம் வரை சென்றும் யாருக்கும் ஜாமீன் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.