சென்னை: மணல் குவாரி ஒப்பந்ததாரர்களின் 130.60 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. திண்டுக்கல் ரத்தினம், சண்முக ராமச்சந்திரன், கருப்பையா, பன்னீர்செல்வம், கரிகாலன் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் அரசிடம் ஒப்பந்தம் எடுத்து மணல் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். அதில் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு வந்தது. அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் அண்மையில் மணல் குவாரி ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்றது. திண்டுக்கல் ரத்தினம், சண்முக ராமச்சந்திரன், பன்னீர்செல்வம், கரிகாலன் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த அமலாக்கத்துறை சோதனையில், முக்கியமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், அரசுக்கு எந்த அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது? என தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தற்போது, மணல் குவாரி ஒப்பந்ததாரர்களின் 130.60 கோடி சொத்துகளை முடக்கியிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரபூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. சண்முக ராமச்சந்திரன், கருப்பையா ரத்தினம், பன்னீர்செல்வம் கரிகாலன் உள்ளிட்டோரின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.
இதில் 109 மணல் அகழ்வு இயந்திரங்கள் சட்டவிரோத மற்றும் சுரங்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல் 35 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. சட்டவிரோத பண மோசடி வழக்கில் சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. முடக்கப்பட்ட ரூ.130 கோடி சொத்துகளில் ரூ.128 கோடி அசையும் சொத்துகள் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.