ராம்பூர்: சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஆசாம் கான்(74), உத்தரபிரதேசத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். இவர் அகிலேஷ் யாதவ் அமைச்சரவையில் அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார். மக்களவை தேர்தலையொட்டி கடந்த 2019 ஏப்ரல் 8ம் தேதி உத்தரபிரதேசம் ராம்பூர் மாவட்டம் ஷேஷாத் நகரை அடுத்துள்ள தமோராவில் நடந்த பேரணியில் ஆசாம் கான் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், ராம்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் இந்திய தேர்தல் ஆணைய அலுவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக ராம்பூர் மாவட்ட வளர்ச்சி அதிகாரி அனில்குமார் சவுகான் அளித்த புகாரின் பேரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இதுகுறித்து எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷோபித் பன்சால் கான், ஆசாம் கான் குற்றவாளி என தீர்ப்பு வழங்கினார். தொடர்ந்து ஆசாம் கானுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் அவருக்கு ரூ.2,500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.