சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு தொடர்பாக கருப்பூர் போலீசில் ஆஜரான 2 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல், 2 பேராசிரியர்கள் ஒன்றிணைந்து அரசு அனுமதியின்றி தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி பல்கலை.யில் பணியாற்றிக் கொண்டே பூட்டர் என்ற கல்வி நிறுவனத்தை தொடங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பூட்டர் பவுண்டேஷன் மூலமாக 10க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு அதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்வதாக புகார் எழுந்தது. பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் என்பவர் சேலம் கருப்பூர் காவல் நிலையத்தில் இந்த புகாரினை அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், பூட்டர் கல்வி நிறுவனத்தை தொடங்கி முறைகேட்டில் ஈடுபட்ட துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். பதிவாளர் தங்கவேல் மற்றும் பேராசிரியர் சதீஷ் ஆகியோர் தற்போது வரை தலைமறைவாக இருந்து வருகின்றனர். இதனிடையே பூட்டர் பவுண்டேசன் மூலமாக என்னென்ன நடவடிக்கைகள் நடந்தது? அதன் மூலமாக மோசடிகள் அரங்கேற்றப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பதற்காக 5 பேருக்கு போலீஸ் சம்மன் அனுப்பியது. பொறுப்பு பதிவாளர் டீன் ஜெயராமன், துணைவேந்தரின் செயலர் சுப்பிரமணிய பாரதி, தற்போதைய பதிவாளர் பதவி வகிக்கும் விஸ்வநாதமூர்த்தி, பல்கலைக்கழக கண்காணிப்பாளர் விஷ்ணு மூர்த்தி, அவரது மனைவி வனிதாவுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியது.
5 பேருக்கு சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இன்று 2 பேர் ஆஜராகியுள்ளனர். அதாவது, 5 பேருக்கு சம்மன் அனுப்பியிருந்த நிலையில் டீன் ஜெயராமன், துணைவேந்தரின் செயலர் சுப்பிரமணிய பாரதி ஆகியோர் கருப்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளனர். தற்போது அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதையடுத்து, பதிவாளர் விஸ்வநாதமூர்த்தி, கண்காணிப்பாளர் விஷ்ணு மூர்த்தி, அவரது மனைவி வனிதா ஆகியோரும் தொடர்ந்து அடுத்தடுத்து விசாரணைக்கு வரவுள்ளனர். இந்த விசாரணையில் மோசடி அரங்கேற்றம் நடந்திருப்பது உறுதியானால் துணை வேந்தர் அடுத்தகட்டமாக கைது செய்வதற்கான வாய்ப்புள்ளது.