சைதாப்பேட்டை : சென்னை சைதாப்பேட்டையில் புறநகர் ரயிலில் திடீரென 4 பெட்டிகள் கழன்றதால் பயணிகள் அச்சம் அடைந்தனர். சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டு இருந்த மின்சார ரயில் காலை 5.15 மணி அளவில் சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே வந்த போது, பலத்த சத்தத்துடன் அந்த ரயிலில் 4 பெட்டிகள் கழன்றன. இதனால் அதிர்ச்சி அடைந்த ரயில் பயணிகள் செய்வதறியாது திகைத்தனர்.
இதையடுத்து அந்த வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். கடற்கரை – தாம்பரம் இடையே ரயில் சேவை முடங்கியதால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் சிரமம் அடைந்தனர். கழன்ற பெட்டிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு 1.30 மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து சீரானது.