மும்பை: விதர்பாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் 29 ஆண்டுகால சாதனையை இந்திய வீரர் சர்ஃபராஸ் கானின் இளைய சகோதரர் முஷீர் கான் முறியடித்துள்ளார். 19 வயது, 14 நாட்களே ஆன முஷீர் மும்பையின் இரண்டாவது இன்னிங்ஸில் 255 பந்துகளில் சதம் விளாசினார்.
ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த மார்ச் 10ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.
மும்பை அணி முதல் இன்னிங்சில் 224 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய விதர்பா அணி முதல் இன்னிங்சில் 105 ரன்களுக்குள் சுருண்டது. இதையடுத்து தனது 2வது இன்னிங்க்ஸை தொடங்கிய மும்பை அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
மும்பை அணியில் ரஹானே 73 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 95 ரன்களும், ஷம்ஸ் முலானி 42 ரன்களும் குவித்தனர். குறிப்பாக இந்திய வீரர் சர்ஃபராஸ் கானின் இளைய சகோதரர் முஷீர் கான் 136 ரன்கள் எடுத்தார். இவர் அடித்த சதத்தின் மூலம் சச்சின் டெண்டுல்கரின் 29 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
1994/95ல் மும்பை அணிக்காக விளையாடிய 21 வயது 11 மாதங்களே ஆன சச்சின் ரஞ்சி இறுதிப் போட்டியில் சதம் அடித்து அசத்தினார். இதையடுத்து ரஞ்சி இறுதிப் போட்டியில் 19 வயது, 14 நாட்களே ஆன முஷீர் கான் சதமடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த மும்பையின் இளம் வீரர் என்ற பெருமையை முஷீர் கான் பெற்றார்.