திருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜைகளுக்குப் பின்னர் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த ஜனவரி 21ம் தேதி காலை சாத்தப்பட்டது. இந்நிலையில் மாசி மாத பூஜைகள் நாளை (14ம் தேதி) முதல் தொடங்குகின்றன. இதை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறப்பார்.
இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நாளை முதல் 18ம் தேதி வரை வழக்கமான பூஜைகளுடன் படி பூஜை, அஷ்டாபிஷேகம், உதயாஸ்தமய பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும். நாளை முதல் 18ம் தேதி வரை பக்தர்கள் காலையில் நெய்யபிஷேகம் நடத்தலாம். 18ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.அன்றுடன் மாசி மாத பூஜைகள் நிறைவடையும். பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு கவுண்டர்கள் செயல்படும்.