Saturday, May 18, 2024
Home » ரஷ்யா இசை கச்சேரியில் துப்பாக்கிச்சூடு: 133 பேர் பலி.! உக்ரைனுக்கு தொடர்பு

ரஷ்யா இசை கச்சேரியில் துப்பாக்கிச்சூடு: 133 பேர் பலி.! உக்ரைனுக்கு தொடர்பு

by Mahaprabhu

மாஸ்கோ: ரஷ்யாவில் இசை நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 133 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்துக்கும் உக்ரைனுக்கும் தொடர்பு உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவின் கிராஸ்னோகோர்ஸ்கில் உள்ள கிரோகஸ் சிட்டி என்ற வணிக வளாகத்தில் ஷாப்பிங் மால், இசை கச்சேரி நடக்கும் அரங்கு உள்ளது. இது சுமார் 6000 பேர் வந்து செல்லும் அளவுக்கு மிகப்பெரியதாகும். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த பகுதி வழக்கம் போல் பொதுமக்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அப்போது துப்பாக்கியுடன் வந்த மர்மநபர்கள் அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்கள். இதனால் அங்கு திரண்டு இருந்த மக்கள் அலறி கூச்சலிட்டபடி சிதறி ஓடினார்கள். துப்பாக்கி சூட்டில் மொத்தம் 133 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். துப்பாக்கி சூடு காரணமாக அங்கு பல இடங்களில் தீப்பற்றி எரிந்தது.தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே அங்கிருந்த திரையரங்கின் மேற்கூரை நேற்று காலை இடிந்து விழுந்தது. துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தீவிரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என்று சந்தேகம் எழுந்தது. இதனிடையே தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 11 பேரை ரஷ்ய போலீசார் கைது செய்துள்ளனர். இதில் 4 பேர் நேரடியாக தாக்குதலில் ஈடுபட்டவர்கள். இவர்கள் ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பகுதியில் உக்ரைன் எல்லை அருகே கைது செய்யப்பட்டதாக விசாரணை குழு தெரிவித்துள்ளது.

அவர்கள் உக்ரைனின் எல்லையை கடக்க திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. எனினும் இதன் நம்பக தன்மையை உறுதி செய்ய முடியவில்லை. இதனிடையே இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தான் பொறுப்பு என்று அமெரிக்க புலனாய்வு அமைப்புகளும் உறுதி செய்துள்ளன. எனினும் தாக்குதல் சம்பவத்துக்கும் உக்ரைனுக்கும் தொடர்புள்ளதாக ரஷ்யாவின் விசாரணை ஏஜென்சிகள் சந்தேகத்தை எழுப்பியுள்ளன. ரஷ்ய அதிபர் புதினும் அதை உறுதி செய்துள்ளார். ரஷ்ய அதிபராக விளாடிமிர் புதின் அதிபராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள நிலையில் இதுபோன்ற தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

துக்கம் அனுசரிப்பு: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறுகையில், துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களுக்கு நாடு முழுவதும் ஞாயிறன்று(இன்று) துக்கம் அனுசரிக்கப்படும். இந்த தாக்குதல் ரஷ்யாவில் நடந்த மிக மோசமான தாக்குதலாகும். நாடு முழுவதும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்” என்றார்.

You may also like

Leave a Comment

twenty + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi