Monday, May 27, 2024
Home » விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம்; அண்ணாமலை உட்பட 350 பேர் மீது வழக்கு; போலீசுக்கு மிரட்டல் ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் மறியல்

விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம்; அண்ணாமலை உட்பட 350 பேர் மீது வழக்கு; போலீசுக்கு மிரட்டல் ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் மறியல்

by MuthuKumar

கோவை ஒண்டிப்புதூர் அருகே காமாட்சிபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கோவை தொகுதி பாஜ வேட்பாளர் அண்ணாமலை பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, இரவு 10 மணியை கடந்திருந்தது. ஆனாலும் அவர், வாகனங்களில் முகப்பு விளக்குகளை அணைத்து விட்டு பிரசார வாகனத்தில் இருந்தபடியே கோவையை நோக்கி புறப்பட்டார். அப்போது ஒலிபெருக்கியை பயன்படுத்தாமல் வாக்காளர்களை பார்த்து கையசைத்து வாக்கு கேட்டு வந்தார். இதனால் விதிகளை மீறி, அண்ணாமலை வாக்கு சேகரிப்பதாக புகார்கள் வந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணை ஆணையர் பார்த்திபன், அண்ணாமலை வந்த வாகனத்தை நிறுத்தி பிரசாரம் செய்ய வேண்டாம் என கேட்டு கொண்டார்.

ஆனால் அண்ணாமலை அதைக் கேட்காமல், ‘‘நீங்க ஒரு தலைப்பட்சமாக நடந்துக்கிறீங்க. நான் என் வீட்டுக்கு போயிட்டு இருக்கேன். ஓட்டு போடுங்க என கேட்கல. கார்ல சும்மா உக்காந்திருந்தேன். இது எப்படி பிரசாரம் ஆகும். நீங்க எப்படி என்னையே கேள்வி கேட்கலாம்?’’ என மிரட்டும் தொணியில் பேசினார்.‌ இதற்கு பதிலளித்த துணை ஆணையர், ‘‘அனைவருக்கும் ஒரே விதிமுறைதான். நீங்கள் வாக்காளர்களை சந்தித்தீர்கள். பிரசாரம் செய்தீர்கள்’’ என கூறினார். ஆனால் அண்ணாமலை துணை ஆணையரிடம் தொடர்ந்து வாக்கு வாதத்தில் ஈட்பட்ட உடனே திடீரென சாலையில் நடந்து சென்று ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் அங்கு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் மறியல் செய்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது ஆம்புலன்ஸ்சுக்குகூட வழிவிடாமல் அவர்கள் மறியல் செய்தனர்.

மேலும், போக்குவரத்துக்கு இடையூறாக இரவு 10 மணிக்கு பிறகு பாஜவினர் பட்டாசு வெடித்து, தாமரை ஜெயிச்சாச்சு… என கோஷமிட்டு தொல்லை கொடுக்கும் வகையில் நடந்து கொண்டதை பார்த்து அந்த பகுதி மக்கள் புலம்பிச் சென்றனர். இது தொடர்பாக தேர்தல் பறக்கும் படை அலுவலர் அகிலான்டேஸ்வரி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வேட்பாளர் அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சேலஞ்சர் துரை, விஜயகுமார், சிதம்பரம் உள்பட 50 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 143, 286, 341, 290 ஆகிய 4 பிரிவுகளில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோவை சிங்காநல்லூர் ேபாலீசாரிடம் வாக்குவாதம் செய்து முடித்துவிட்டு, அண்ணாமலை, அடுத்த சில நிமிடங்களில் சூலூரில் பிரசாரத்திற்கு சென்றார். அங்கும், இரவு 10.30 மணிக்கு மேல் பிரசாரத்தில் ஈடுபட முயன்றார். அவரை சூலூர் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, ‘நான் வாகனத்தில் விளக்கை அணைத்துவிட்டேன். நான் பிரசாரம் செய்ய வரவில்லை. 10 மணிக்கு மேல் வேட்பாளர் எங்கும் செல்லக்கூடாது. யாரையும் பார்க்கக்கூடாது என சட்டத்தில் கூறவில்லை’ என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். போலீஸ் தடையை மீறி, வாகனத்தைவிட்டு கீழே இறங்கி, நடந்து சென்று, மாவட்ட எல்லையில் பிரசாரம் செய்தார். போலீசார் தடுத்ததால் தனது ஆதரவாளர்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக, தேர்தல் பறக்கும் படை அலுவலர் சண்முகப்பிரியா கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலை மற்றும் 300 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 143 மற்றும் 341 ஆகிய இரு பிரிவுகளில் சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த 12ம் தேதி கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் இரவு 10 மணிக்கு பிறகும் அண்ணாமலை பிரசாரம் செய்ததாக, அப்பகுதி திமுகவினர் அளித்த புகாரின்பேரில், பீளமேடு போலீசார் அண்ணாமலை மற்றும் மாவட்ட பாஜ தலைவர் ரமேஷ் ஆகிய இருவர் மீது, தேர்தல் நடத்த விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்தனர். தற்போது சிங்காநல்லூரி, சூலூர் போலீசாரும் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த 4 நாட்களில், கோவை மாநகரில் 2 காவல் நிலையம், புறநகரில் ஒரு காவல் நிலையம் என 3 காவல் நிலையங்களில் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

eighteen − 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi