டெல்லி: ஒன்றிய அரசின் 62% புதிய சைனிக் பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பு ஆர்எஸ்எஸ், சங்க் பரிவார் மற்றும் பாஜகவை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது ஆர்டிஐ மூலம் அம்பலமாகியுள்ளது. ஒன்றிய அரசின் சைனிக் பள்ளிகள் எனப்படும் ராணுவ பள்ளிகள் இந்திய ராணுவத்தில் சேருவதற்கு மாணவர்களை தயார்படுத்துவதை பிரத்யேக நோக்கமாக கொண்டுள்ளன. நாடு முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் இயங்கி வந்த நிலையில் புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் மேலும் 100 சைனிக் பள்ளிகளை தனியார் பங்களிப்புடன் நிறுவ ஒன்றிய அரசு முடிவு செய்தது.
அதன்படி 2022 முதல் 2023 வரை தனியார் பங்களிப்போடு, 40 புதிய ராணுவப் பள்ளிகளை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது. இதில் 62% பள்ளிகள் ஆர்எஸ்எஸ், சங்க் பரிவார் மற்றும் பாஜகவை சார்ந்த தனி நபர்கள் அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது ஆர்டிஐ மூலம் அம்பலமாகியுள்ளது. ஆனால் கிருஸ்தவ, இஸ்லாமிய அமைப்பின் கீழ் செயல்படும் இந்தியாவின் எந்தஒரு மத சிறுபான்மையின அமைப்புகளுக்கும் இதுவரை சைனிக் பள்ளிகளை நடத்தும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
குஜராத், உத்தரப்பிரதேசம், ஹரியானா, அருணாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டுமே புதிய சைனிக் பள்ளிகளை நடத்தும் ஒப்பந்தம் வழங்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 11 பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பை பாஜகவை சேர்ந்த தலைவர்கள் பெற்றுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். வசம் சென்ற 8 சைனிக் பள்ளிகள்; பிற இந்துத்துவ அமைப்புகளிடம் 6 சைனிக் பள்ளிகள் சென்றன. உத்தரப்பிரதேசம், இமாச்சலில் இந்தியாவின் முதல் பெண்கள் ராணுவப் பள்ளிகளை இந்துத்துவவாதி சாத்வி ரிதம்பரா நடத்துவது குறிப்பிடத்தக்கது.