Friday, May 3, 2024
Home » ரூ.2000 நோட்டு மாற்றத்தால் வங்கிகளில் பண தட்டுப்பாடு; சில கிளைகளில் தற்காலிக நிறுத்தம்

ரூ.2000 நோட்டு மாற்றத்தால் வங்கிகளில் பண தட்டுப்பாடு; சில கிளைகளில் தற்காலிக நிறுத்தம்

by Suresh

புதுடெல்லி: ரூ.2000 நோட்டு மாற்றம் காரணமாக சில வங்கிகளில் பண தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், சில வங்கிகளில் சிறிது நேரம் ரூ.2000 நோட்டு மாற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரூ.2000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக அறிவித்த ரிசர்வ் வங்கி, செப்டம்பர் 30க்குள் பொதுமக்கள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என அவகாசம் வழங்கி உள்ளது. வங்கிகளில் நேரடியாக ரூ.2000 நோட்டுகளை கொடுத்து மாற்றிக் கொள்ளும் நடைமுறை கடந்த 23ம் தேதி தொடங்கிய நிலையில், முதல் நாள் மந்தமாக இருந்தது. ஆனால் 2வது நாளான நேற்று நிறைய பேர் வங்கிகளில் ரூ.2000 நோட்டுகளை மாற்ற வந்தனர்.

இதன் காரணமாக டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் சில வங்கிக் கிளைகளில் ரூ.500 மற்றும் அதற்கு குறைவான மதிப்புடைய நோட்டுகள் தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிறிது நேரம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட பிறகு மீண்டும் ரூ.2000 நோட்டுகள் மாற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். இது குறித்து கனரா வங்கியின் தலைமை பொது மேலாளர் பாவேந்திர குமார் கூறுகையில், ‘‘ரூ.2,000 நோட்டுகளை மாற்றும் செயல்முறையை தடையின்றி செயல்படுத்த, டெல்லி முழுவதும் உள்ள அனைத்து கிளைகளிலும் ரூ.500, ரூ.200 மற்றும் ரூ.100 நோட்டுகளை தொடர்ந்து விநியோகித்து வருகிறோம்’’ என்றார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கலந்து கொண்டு அளித்த பேட்டியில், “2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் முழு செயல்முறைகளிலும் எந்த இடையூறுகளும் இருக்காது. இதுபற்றி நாங்கள் ஆய்வு செய்துள்ளோம். ரிசர்வ் வங்கி நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதுவரை எந்த பெரிய பிரச்னையும் ஏற்படவில்லை” என்று தெரிவித்தார்.

வட்டி குறையுமா?
வட்டி விகிதம் தொடர்பாக பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், “வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்வது எனது கைகளில் இல்லை. கள நிலவரத்தை பொறுத்தே அமையும். கடந்த 2022ம் ஆண்டு 3.4 சதவீதமாக இருந்த உலக பொருளாதார வளர்ச்சி 2023ல் 2.8 சதவீதமாக குறையும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. இது 2024ல் 3 சதவீதமாக சற்று உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு இடையே இந்திய வங்கி அமைப்பு நிலையானதாக உள்ளது” என்றார்.

You may also like

Leave a Comment

two + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi