தர்மபுரி: கோயில் ஊர்வலத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் பலியாகினர். தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த சி.பள்ளிப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு, கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு, சுவாமி ஊர்வலம் தொடங்கியது. மினிவேனின் பின்புறத்தில் பட்டாசுகளை வைத்திருந்தனர்.
வேனை அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் ராகவேந்திரன்(26) ஓட்டி வந்தார். பக்கத்து சீட்டில் அசோக் என்பவரது மகன் ஆகாஷ்(6) அமர்ந்திருந்தான். ஊர்வலத்தின்போது வேனுக்கு முன்னால் வைத்த சரவெடி திடீரென பறந்து வந்து பட்டாசுகள் மீது விழுந்தது. இதில், வேனில் இருந்த பட்டாசுகள் பயங்கரமாக வெடித்துச் சிதறியதில் சிறுவன் ஆகாஷ், டிரைவர் ராகவேந்திரன் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.