நாசரேத்:: நாலுமாவடி மெயின் ரோட்டில் தேங்கிக் கிடக்கும் மழைநீரால் தொற்றுநோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. நாலுமாவடி மெயின் ரோட்டில் கடந்த 10 நாட்களாக மழைநீர் அதிகமாக தேங்கிக் கிடக்கிறது. இந்த ரோடு வழியாக பஸ்கள், லாரிகள், வாகனங்கள் சென்று வருகின்றன. பொதுமக்கள் இருசக்கர வாகனங்களிலும், சைக்கிள்களிலும் சென்று வருகின்றனர். தேங்கிக் கிடக்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவதோடு பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் செல்ல பயந்து காணப்படும் நிலை உள்ளது.
இதனால் போக்குவரத்துக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது தேங்கிக் கிடக்கும் மழைநீர் கழிவுநீராக மாறியதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு நாலுமாவடி மெயின் ரோட்டில் தேங்கிக் கிடக்கும் மழைநீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.