நாசரேத்: மழையால் சேதமடைந்த பாட்டக்கரை சாலையை விரைவில் சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாசரேத் – குரும்பூர் இடையே உள்ள பாட்டக்கரை சாலையின் கரையோர பகுதி மழையால் சேதமடைந்து பெரிய பள்ளங்களாக காணப்படுகிறது. இதன் வழியாக தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள், வாகனங்கள் சென்று வருகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு இருசக்கர வாகனங்களில் மாணவ – மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் செல்கின்றனர். குறிப்பாக புன்னைநகர் கோயிலுக்கும், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் நடைபெறும் ஜெபக்கூட்டங்களுக்கும் இதன் வழியாகத் தான் வாகனங்கள் சென்று வருகிறது.
மழையால் இச்சாலை சேதமடைந்து உருவாகியுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மழையால் சேதமடைந்து கிடக்கும் பாட்டக்கரை மெயின் ரோட்டை விரைந்து சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.