சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), தமிழ்நாடு அரசு துறைகளின் கீழ் வரும் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு, அதற்கான தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் இதுவரை டி.என்.பி.எஸ்.சியால் நடத்தி முடிக்கப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படாமல் இருக்கும் தேர்வுகள் எவை, அதற்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த 2022 பிப்ரவரி மாதம் அறிவிப்புகள் வெளியிடப்பட்ட குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வுக்கான முடிவு வருகிற 12ம் தேதி வெளியாகிறது. இந்த பதவிகளில் முதலில் 5,529 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு, பின்னர் அதில் கூடுதல் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் டி.என்.பி.எஸ்.சி. தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் காலி பணியிடங்கள் எண்ணிக்கை 5,777 என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் குரூப்-1ஏ பதவியில் வரும் 9 உதவி வனக்காப்பாளர் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு முடிவும் இம்மாதத்துக்குள் வெளியாகிறது.
இதேபோல், 95 குரூப்-1 பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு, குரூப்-1சி பதவியில் வரும் 11 மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு, சுற்றுலா அலுவலருக்கான எழுத்து தேர்வு, மருந்து பரிசோதனை ஆய்வக இளநிலை ஆய்வாளர் பணிக்கான கணினி வழித்தேர்வு, கால்நடை தடுப்பு மருத்துவ நிறுவன ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான கணினி வழித்தேர்வுக்கு அடுத்த மாதம் முடிவுகள் வெளியிடப்படும்.