சென்னை: இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது நடவடிக்கைக்கு உள்ளாவது மிகுந்த கவலையளிக்கிறது. அதன்படி, இந்த 2 மாதத்தில் 69 மீனவர்கள் கைது நடவடிக்கை என்பது அதிகரித்துள்ளது மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது.
இதுதவிர, தொடர்ந்து மூன்று மீனவர்களை ‘மீண்டும் மீண்டும் குற்றம்புரிபவர்’ பட்டியலில் அநியாயமாக சேர்த்து விடுவிக்காமல் சிறையில் அடைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பது மட்டுமல்லாமல், அவர்களது படகுகளை நாட்டுடைமையாக்கும் இலங்கை அரசின் செயல் சிறுகச் சிறுகச் சேர்த்த சேமிப்புகளையும் அழிக்கிறது.
எனவே, இந்திய பிரதமரும், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருமான நீங்களும் உடனடியாக இதில் தலையிட்டு நமது மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதையும் அவர்களது படகுகள் விடுவிக்கப்படுவதையும் உறுதிசெய்திட வேண்டும் என தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் சார்பாகவும் நான் கேட்டுக்கொள்கிறேன். இதனை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி, நமது மீனவர்களின் நலனைக் காக்கும் வகையில் உறுதியான நடவடிக்கையை எடுத்திட வேண்டும். ஏனென்றால், அவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல, பெருமைமிகு இந்தியர்களும் கூட. இவ்வாறு முதல்வர் எழுதியுள்ளார்.