சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது: ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் சிறுபான்மை நல ஆணையக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வரும் நாம், முதன்முதலாக சிறுபான்மைச் சமூகப் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்கும் வகையில் நேற்றுமுன்
தினம் கூட்டத்தை நடத்தியதுடன் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் 10 அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கிறோம். குறிப்பாக, சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகையை ஒன்றிய அரசு நிறுத்தியதை எதிர்த்துக் கடந்த 2022 டிசம்பர் மாதம் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
எனினும் சிறுபான்மையினர் மீதான ஒன்றிய அரசின் பாராமுகத்தையடுத்து, அவர்கள் நிறுத்திய கல்வி உதவித்தொகையை நாமே வழங்க முடிவெடுத்துள்ளேன். ஒன்றிய பாஜ நிறுத்திய உதவித்தொகை இனி தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் வக்ப் வாரியம் மூலம் முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்கப்படும். சிறுபான்மையினரின் சமூக-கல்வி-பொருளாதார வளர்ச்சிக்கும் அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கும் என்றும் துணைநிற்பது திமுக அரசு தான் என இதன் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.