புழல்: புழல் காந்தி தெருவில் பயன்பாடில்லாமல் உள்ள வருவாய்த்துறை அலுவலகத்துக்கு கூடுதலாக ஒரு வருவாய்த்துறை ஆய்வாளரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாதவரம் வருவாய்த்துறை அலுவலகத்திற்கு உட்பட்ட மாதவரம், லட்சுமிபுரம், ரெட்டேரி, புத்தகரம், கல்பாளையம், விநாயகபுரம், சூரப்பட்டு, பாரதிதாசன் நகர், சண்முகபுரம், கதிர்வேடு, எம்ஜிஆர் நகர், புழல், அண்ணா நினைவு நகர், காவாங்கரை, வடபெரும்பாக்கம், செட்டிமேடு, மஞ்சம்பாக்கம், மாத்தூர் உள்ளிட்ட கிராம மக்கள் பிறப்பு, இறப்பு, வருவாய், சாதி மற்றும் இருப்பிட சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு சான்றுகளை பெறுவதற்கு ஒரே ஒரு வருவாய்துறை ஆய்வாளர் அலுவலகம் மட்டுமே மாதவரம் மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகில் செயல்பட்டு வருகிறது.
இங்கு தினசரி நூற்றுக்கணக்கானோர் பல்வேறு சான்றிதழ்கள் விண்ணப்பிக்க வருவதால் பெரும்பாலான நேரங்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. ஒரு சில நேரங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரி இல்லையெனில் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ளது. இதனால் அதிகாரிகளுக்கும் பணிச்சுமை ஏற்படுகிறது. எனவே புழல் காந்தி தெருவில் பயன்பாடில்லாமல் உள்ள வருவாய்த்துறை அலுவலகத்துக்கு கூடுதலாக ஒரு வருவாய்த்துறை ஆய்வாளரை நியமித்து சம்பந்தப்பட்ட வருவாய்த் துறையினர் மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால் மக்கள் சான்றிதழ் பெற ஏதுவாக இருக்கும். எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.