Friday, May 17, 2024
Home » பாஜவுக்கு சாமரம் வீசியவர் எடப்பாடி பழனிசாமி முதல்வரை பற்றி பொய் மூட்டை அவிழ்த்திருக்கிறார்: டிகேஎஸ்.இளங்கோவன் அறிக்கை

பாஜவுக்கு சாமரம் வீசியவர் எடப்பாடி பழனிசாமி முதல்வரை பற்றி பொய் மூட்டை அவிழ்த்திருக்கிறார்: டிகேஎஸ்.இளங்கோவன் அறிக்கை

by Dhanush Kumar

சென்னை: திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய பாஜ அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பு, சிஏஏ சட்டம் என்று மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறித்தும், சிறுபான்மை இன மக்களை அங்கீகரிக்க மறுத்தும் சட்டங்களை நிறைவேற்றிய போது, பாஜ அரசை ஆதரித்து, சாமரம் வீசிக் கொண்டிருந்த எடுபிடி பழனிசாமி, முதல்வர் மு.க.ஸ்டாலினை குறை கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். 10 ஆண்டுகளில் தமிழக அரசின் நிதி மேலாண்மையைச் சரியாக கையாளாமல் 5.7 லட்சம் கோடி ரூபாய் கடனில் நிறுத்திச் சென்ற எடப்பாடி அரசின் குறைகளை, சரி செய்வதையே தற்போதைய சவாலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி இப்படியொரு அறிக்கை வெளியிட்டிருப்பது நகைச்சுவையாக உள்ளது.

திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்த பல்வேறு திட்டங்களைச் சிறப்பாக நிறைவேற்றி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியை குறை கூறியுள்ள எடப்பாடி, கோயம்பேட்டில் உள்ள பேருந்து நிலையத்தை சென்று பார்த்தால் புரியும், திமுக ஆட்சிக் காலத்தில் 2011ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை திறந்து வைத்து, தன்னுடைய பெயரை பொறித்துக் கொண்டது யார் என்பது தெரியும். தமிழகத்தில் விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களைப் பற்றி யாரும் கவலைப்படாமல், சாதி அரசியல் நடத்துகிறார்கள் என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது ‘‘நான் புராணங்களைப் படித்ததில்லை. அறிஞர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள்’’ என்று தான் அறிஞர் இல்லை என்று எடப்பாடி தன்னைப் பற்றி தானே தெளிவாக விளக்கியிருக்கிறார்.

அதோடு, ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து நடத்தப்பட்ட விடுதலைப் போரை, மகாபாரதப் போர் என்று நினைத்துக் கொண்டு பேசியிருக்கிறார். அத்துடன், ஆங்கிலயே ஆட்சிக்கு எதிராக நடந்த போர், புராணக் கதைகளில் உள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவருடைய பேட்டியையும், அவருடைய அறிக்கையையும் படித்துப் பார்த்தால், அவர் யார் என்பதையும், அவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது அவிழ்த்துக் கொட்டிய பொய் மூட்டையை பற்றியும் தெரிந்து கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

four × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi