ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் கிராமத்தில் பழுதாகி கிடக்கும் பழைய ரேஷன் கடை கட்டிடம் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் ஊராட்சியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள கூட்டுறவு சங்க வளாகத்தில் 50 வருடங்கள் பழமை வாய்ந்த ரேஷன் கடை கட்டிடம் உள்ளது. இந்த ரேஷன் கடையில் பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்டவர்கள் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை ஆகிய பொருட்கள் வாங்கி வந்தனர். ஆனால் இந்த ரேஷன் கடை கட்டிடத்தின் மேல் தளம் சேதமடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளதால் மழை காலங்களில் மழைநீர் கடைக்குள்ளேயே கசிந்தது.
இதனால் ரேஷன் பொருட்கள் நனையும் நிலை ஏற்பட்டது. எனவே, சேதமடைந்து, பழுதடைந்து கிடக்கும் ரேஷன் கடையை சீரமைக்க வேண்டும் அல்லது வேறு இடத்தில் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி இதன் அருகிலேயே புதிய கட்டிடம் கட்டி முடித்தனர். அதில் தற்போது ரேஷன் கடை இயங்கி வருகிறது. மேலும் பழைய ரேஷன் கடை கட்டிடம் பயன்பாடில்லாமல் உள்ளது. எனவே இந்த பழைய கட்டிடத்தை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.