சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை : தமிழ்நாட்டின் காவிரி பாசனப் பகுதிகளில் கருகும் நிலையில் உள்ள குறுவை நெற்பயிர்களைக் காக்க உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அனைத்துத் தரப்பிலிருந்தும் அழுத்தங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 5000 கனஅடி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட்டிருக்கிறது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் முழுமையாக தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வந்து சேராது. கர்நாடகத்தின் குடிநீர் தேவை போக மீதமுள்ள தண்ணீரை தமிழகத்துக்கு வழங்குவதாக கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவக்குமார் கூறுகிறார்.
கர்நாடக அணைகளுக்கு வரும் 35,000 கனஅடி தண்ணீரில் வெறும் 14 விழுக்காட்டை மட்டும் தமிழக பாசனத்துக்கு திறந்து விட்டு, 86 விழுக்காட்டை கர்நாடகம் சேமிக்கிறது. தமிழ்நாட்டின் காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் நிலையில் உள்ள குறுவை நெற்பயிர்களைக் காப்பாற்ற வேண்டியது கட்டாயம் ஆகும். அதற்காக காவிரியில் வினாடிக்கு 25,000 கனஅடி வீதம் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட வேண்டும். அவ்வாறு கர்நாடகம் நீர் திறந்து விடுவதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். அதற்கு தேவையான அழுத்தத்தை தமிழக அரசு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.