சென்னை: ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரத்து குறைவு எதிரொலியாக தமிழகத்தில் அரிசி விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. சாப்பாட்டு அரிசி ரூ.10, இட்லி அரிசி ரூ.4 வரையும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தமிழ்நாட்டில் அரிசி விலையும் கிடு, கிடுவென அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆந்திரா, கர்நாடகம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நெல் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது அங்கு பெய்து வரும் பலத்த மழையால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்த 3 மாநிலங்களிலும் இருந்து நெல் வரத்து என்பது வெகுவாக குறைந்துள்ளது. இது தான் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் எல்லா ரக அரிசியும் விலை உயர்ந்துள்ளது. குறைந்தபட்சம் கிலோவுக்கு ரூ.4 முதல் அதிகபட்சமாக ரூ.10 வரை விலை உயர்ந்துள்ளது. அதாவது கர்நாடகா பொன்னி அரிசி கிலோ ரூ.38லிருந்து தற்போது ரூ.48 ஆக விலை உயர்ந்துள்ளது. ஆந்திரா பொன்னி அரிசி கிலோ ரூ.38லிருந்து ரூ.55 ஆக விலை அதிகரித்துள்ளது. இதே போல இட்லி அரிசியான ஐஆர் 20, கோ-43 ரக அரிசி கிலோ ரூ.36லிருந்து ரூ.40 ஆக உயர்ந்துள்ளது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் தான் புதிய நெல் அறுவடைக்கு வரும். அது வரை அரிசி விலை குறைய வாய்ப்பு இல்லை என்று வியாபாரிகள் கூறியுள்ளனர்.