சென்னை: இந்நிதியாண்டில் பதிவுத்துறை வருவாய் வளர்ச்சியில் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது என பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: 2023-24ம் நிதியாண்டில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் ரூ.1,812.70 கோடி வருவாயை பதிவுத்துறை ஈட்டியுள்ளது. சென்ற நிதியாண்டில் 2023 பிப்ரவரியில் அடைந்த வருவாய் ரூ.1,593.95 கோடியை விட இது ரூ.218.74 கோடி அதிகம். இந்த நிதியாண்டில் பிப்ரவரி முடிய ரூ.16,653.32 கோடி வருவாய் பதிவுத்துறையால் ஈட்டப்பட்டுள்ளது. இது சென்ற நிதியாண்டில் பிப்ரவரி வரை அடைந்த வருவாய் ரூ.15,481.72 கோடியை விட ரூ.1171.60 கோடி (7.57சதவீதம்) அதிகம்.
ஜியோ கோ-ஆர்டினேட்ஸ் உடன் கூடிய புகைப்படத்தை கிரைய ஆவணத்துடன் இணைத்து ஆவணப்பதிவு மேற்கொள்ளும் நடைமுறையால் கட்டிட மதிப்பிற்கான முத்திரைத்தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் செலுத்துவதை தவிர்க்கும் நோக்கில் கட்டிடங்களை மறைத்து ஆவணம் பதிவு செய்வது தடுக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டிடங்களின் மதிப்புக்கான உரிய முத்திரைத்தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் அரசுக்கு செலுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலீடுகளின் வளர்ச்சி, தனிநபர் வருவாய் பெருக்கம் ஆகியவற்றின் காரணமாக பதிவுத்துறையில் இதை விடவும் கூடுதலான வருவாய் இந்த நிதியாண்டில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டிசம்பர் மாதம் சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் வெள்ளத்தின் காரணமாக மனைகளின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.