அண்ணாநகர்: நெற்குன்றத்தில் உரிய ஆவணமின்றி வங்கி ஏடிஎம் மையத்துக்கு எடுத்து சென்ற ₹65,500 ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அப்பணத்தை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இதனால் ₹50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்லும் நபர்கள் உரிய ஆவணமின்றி அதிகளவில் பணம் எடுத்து சென்றால், அவை தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. பின்னர் அப்பணத்துக்கு உரிய ஆவணங்களை காட்டி திரும்பப் பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனைகளை நடத்தி, அதிகளவில் ரொக்கப் பணம் மற்றும் பல்வேறு பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கோயம்பேடு மற்றும் நெற்குன்றம் பகுதிகளில் நேற்றிரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரி செல்வம் தலைமையிலான போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த வாலிபரை எஸ்ஐ மகாலிங்கம் மடக்கி பிடித்து விசாரித்தார். விசாரணையில், அவர் நெற்குன்றம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் எனத் தெரியவந்தது.
மேலும், அவர் வங்கி ஏடிஎம் மையத்தில் செலுத்துவதற்கு உரிய ஆவணமின்றி ₹65,500 ரொக்கப் பணத்தை எடுத்து சென்றிருப்பது தேர்தல் பறக்கும் படையினருக்குத் தெரியவந்தது. அப்பணத்தை பறிமுதல் செய்து, கிண்டியில் உள்ள அரசு கருவூலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். பின்னர் அப்பணத்துக்கு உரிய ஆவணங்களை கருவூவத்தில் காட்டி திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று சந்தோஷை அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.