மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த அண்ணாநகர் பகுதியில் தமிழக அரசு சார்பில், தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் நினைவு மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில், மேலும் சில பணிகள் நடைபெறவேண்டியது உள்ளது. இந்தநிலையில் இந்த மணிமண்டபம் அமைந்துள்ள பகுதிக்கு செங்கல்பட்டு தெற்கு மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட தலைவர் ஒ.இ.சங்கர், மாவட்ட செயலாளர் சி.கே.மூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் விஜயகுமார், மாநில பொறுப்பாளர் சேகர் உள்ளிட்ட பலர் வந்தனர். பின்னர் அவர்கள் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ள பகுதியை சுற்றி வளர்ந்துள்ள புதர்கள், செடி, கொடிகளை அகற்றினர்.
புரட்சி பாரதம் கட்சியினர் கூறுகையில், ‘’சில ஆண்டுகளாக நடைபெற்றுவரும் பணியினை வேகப்படுத்தி முடித்துக் கொடுக்க வேண்டும். இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவர், தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்ப இருக்கிறோம். ரெட்டைமலை சீனிவாசன் மணி மண்டபத்தை திறக்க புரட்சி பாரதம் கட்சி முன்னின்று செயல்படும்’ என்றனர்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள் சரத்குமார், தேவேந்திரன், யுவராஜ், மதுராந்தகம், சித்தாமூர், இலத்தூர் மற்றும் அச்சிறுப்பாக்கம் பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.