புழல்: செங்குன்றம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் இன்ஜின் கோளாறு காரணமாக திடீரென தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பெரம்பூர் சரஸ்வதி ஸ்கொயர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்(48). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று தனது காரில் சோழவரம் அடுத்த சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு சென்று விட்டு காரில் வீட்டுக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார். செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் சிக்கனல் அருகே காரின் முன் பக்கத்தில் திடீரென புகை வந்தது.
காரை ஓட்டி வந்த செந்தில் உடனே காரை நிறுத்திவிட்டு இறங்கியபோது திடீரென தீ பற்றி எரிந்தது. இந்த சம்பவம் குறித்து அந்த வழியாக சென்றவர்கள் செங்குன்றம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே, செங்குன்றம் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். தீயை தண்ணீர் பீச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும், காரின் முன் பக்கம் எரிந்த நாசமானது. இது குறித்து செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் இன்ஜின் கோளாறு காரணமாக தீ பிடித்து எரிந்தது என தெரிய வந்தது. இந்நிலையில், நேற்று பகலில் நடந்த தீ விபத்தால் பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.