ஜெருசலேம்: ஹமாசை வேரோடு அழிக்கும் வரை, இன்னும் பல மாதங்களுக்கும், அதை தாண்டி நீண்ட காலத்திற்கும் போரை தொடர தயாராக இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேல், ஹமாஸ் படையினர் இடையேயான போர் 2 மாதத்தை தாண்டி நீடிக்கிறது. இதுவரை இப்போரில், 18,200 பேர் பலியாகி விட்டனர். தற்போது தெற்கு காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகரில் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 20 பேர் கொல்லப்பட்டனர். இதற்கிடையே, காசாவில் இருந்து ஹமாசை வேரோடு அழிக்கும் வரை எவ்வளவு மாதம் ஆனாலும், நீண்ட காலத்திற்கும் போரை தொடர்வதற்கு தயாராக இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேல், ஹமாஸ் இருதரப்பை மத்தியஸ்தம் செய்து வைக்கும் கத்தார் அரசு, ‘‘ போரை நிறுத்துவதற்கும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஆனால் போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்கு சாதகமான சூழல் இல்லை’’ என கூறி உள்ளது.