சென்னை: ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.2.81 கோடியில் பல்வேறு திட்ட பணிகளை அமைச்சர், எம்பி ஆகியோர் தொடங்கி வைத்தனர். ராயபுரம் மண்டலம், 59வது வார்டுக்குட்பட்ட எல்லீஸ்புரத்தில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், சென்னை நடுநிலை பள்ளிக்கு, சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் 726 சதுர அடி பரப்பளவில் 6 கூடுதல் வகுப்பறை கட்டிட பணியினை அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர், மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு நிதியின் கீழ், 59வது வார்டுக்குட்பட்ட சத்தியவாணி முத்து நகரில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் 195 மீ. நீளமுள்ள புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மற்றும் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் சத்தியவாணி முத்து நகரில் உள்ள சமூக நலக்கூடத்தை மேம்படுத்தும் பணியினை தொடங்கி வைத்தனர்.
பின்னர், 60வது வார்டுக்குட்பட்ட அங்கப்பநாயக்கன் தெருவில் உள்ள உருது பள்ளியில் துறைமுகம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.96.17 லட்சம் மதிப்பீட்டில் 333 சதுர மீட்டர் பரப்பளவில் 3 தளங்களுடன் கூடிய பள்ளிக் கட்டிட பணியினை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் வடக்கு வட்டார துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், மண்டலக்குழுத் தலைவர் ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர்கள் சரஸ்வதி, இசட் ஆசாத், மண்டல அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.