Saturday, July 27, 2024
Home » கோடை மழையை எதிர்கொள்வது எப்படி?

கோடை மழையை எதிர்கொள்வது எப்படி?

by Porselvi

கோடையில் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்த நிலையில் ஆறுதல் அளிக்கும் விதமாக ஆங்காங்கே கோடை மழை பெய்து பூமியை குளிரவைத்துக் கொண்டிருக்கிறது. வெயில் அதிகரித்த சமயத்தில் ஏற்பட்ட வெப்ப அலையால் உடல் உஷ்ண பிரச்னை எதிர்கொண்டவர்கள், கோடை மழையால் ஏற்பட்டிருக்கும் பருவநிலைமாற்றத்திற்கு ஏற்ப தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். இல்லா விட்டால் உடல் நலத்திற்கு தீங்கு விளைவித்து விடும். என்னென்ன விஷயங்களை செய்யலாம்? செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

உண்ணும் உணவில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அது நன்கு சமைக்கப்பட்டதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளவேண்டும். ஏனெனில் நன்கு வேகவைக்கப்படாத உணவுகள் செரிமானமாவதற்கு கூடுதல் நேரமாகும். சிலருக்கு உடல் உபாதைகளையும் ஏற்படுத்தும். அதனால் துரித உணவுகளை தவிருங்கள். சாலையோர உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகள் தரமானதா? என்பதை உறுதி செய்து விட்டு உட்கொள்ளுங்கள். ஏனெனில் வெயில் சுட்டெரித்த நிலையில் இருந்து ஈரப்பதமான சூழலுக்கு மாறுவதால் காற்று மூலம் கலக்கும் மாசுக்கள் உணவில் படியக்கூடும். அதனுடன் அதிக ஈரப்பதமான சூழலும் சேர்ந்து உணவு கெட்டுப்போக வழிவகுத்துவிடும். இறுதியில் உணவு விஷத்தன்மைக்கு மாறிவிடக்கூடும். வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி புரியும். குறிப்பாக கோடைகாலம் முடிந்து மாறும் பருவநிலை மாற்றத்தையும், கோடை மழையையும் எதிர் கொள்ள உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கச் செய்யும் நோய்கள் மற்றும் நோய்த் தொற்றுகளை எதிர்த்து போராடவும் உதவும்.

மழைக்காலத்தில் புரோபயாடிக் உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் பருவநிலை மாற்றம் காரணமாக குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். புரோபயாடிக் உணவுகளை உட்கொண்டால் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் செரிமான பிரச்னைகளைத் தடுக்கும். மேலும் கோடையும், மழையும் அதிகமாக இருக்கும் தருவாயில் கடைகளில் காய்ச்சாத பால் கலந்து விற்கும் ரோஸ் மில்க், மில்க் ஷேக் வகைகள், பழ ஜூஸ்களை தர்க்கவும். ஏனெனில் கடைகளில் பெரும்பாலும் முன்பக்கம் கண்ணாடி வைக்கப்பட்ட கமர்சியல் குளிர்சாதனப் பெட்டிகள்தான் வைத்திருப்பார்கள். அதில் பால் சரியாக பதப்பட்டு வைத்திருக்க மாட்டார்கள் என்பதால் பாக்டீரியாக்கள் இருக்கும். இவை சிறுநீரக நோய்த் தொற்று, வயிற்று ஒவ்வாமை போன்ற பிரச்னைகளை உண்டாக்கும். குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளோர், அடிக்கடி வயிற்றுப் பிரச்னைகளுக்கு ஆளாவோர், எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்கள் இந்த பச்சைப்பால் பானங்களைத் தவிர்க்கவும்.

பருவநிலை மாறுபடும், மழைநீர் தேங்குவதும், கொசு உற்பத்திக்கு வித்திடும் டெங்கு, மலேரியா மற்றும் ஜிகா வைரஸ் போன்ற நோய்களை கொசு பரவச் செய்துவிடும். கோடை மழையின் போது தாழ்வான பகுதியில்தான் மழைநீர் அதிகம் தேங்கும். அதற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். கொசுக்கடியை தடுக்க கொசு விரட்டிகளை பயன்படுத்துங்கள். கைகள், உடலை முழுவதும் மூடும் வகையிலான ஆடைகளை அணியுங்கள்.வெப்ப நிலை குறைந்து ஈரப்பதத்தின் அளவு அதிகரிப்பது பூஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கும். உடலை எப்போதும் சுத்தமாகவும், உலர்வாகவும் வைத்திருப்பது முக்கியம். குறிப்பாக கால்கள் மற்றும் கைவிரல்கள் உலர்வாக இருக்க வேண்டும். ஏனென்றால் விரல்களுக்கிடையே பூஞ்சைத் தொற்று ஏற்பட்டு பாதிப்பை உண்டாக்கும்.

கோடை காலம் முடிவுக்கு வந்து பருவநிலை மாறுவதற்கு ஏற்ப பருகும் தண்ணீரை மாற்ற வேண்டும். குளிர்ந்த நீர் பருகுவதை தவிர்த்து தண்ணீரை நன்கு காய்ச்சி ஆறவைத்து பருக வேண்டும்.வடிகட்டிய தண்ணீரை பருகுவதும் நல்லது. மழை சமயங்களில் குடிநீரில் அசுத்த நீர் கலந்தால் காலரா, டைபாய்டு போன்ற நீரினால் பரவும் நோய்கள் அதிகரிக்கும். அதனை கருத்தில்கொண்டு தண்ணீர் பருக வேண்டும்.மழையில் நனைவதை முடிந்தவரை தவிருங்கள். எதிர்பாராதவிதமாக மழை நீரில் நனைந்து உடல் ஈரமாகிவிட்டால் வீட்டிற்கு வந்ததும் குளித்து விட்டு ஆடையை மாற்றி விடுங்கள். அது காய்ச்சல் உள்பட பிறநோய் பாதிப்புகளை தடுக்க உதவும்.

 

You may also like

Leave a Comment

five × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi