சென்னை: நடிகர் விஷால் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு லைகா நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தனது ‘விஷால் பிலிம் பேக்டரி’ படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் ஏற்று பைனான்சியரிடம் செலுத்தியது. அந்த தொகையை விஷால் லைகா நிறுவனத்திற்கு திருப்பி வழங்காததையடுத்து அவருக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, ரத்னம் படத்திற்காக விஷாலுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளம் ரூ. 2 கோடியே 60 லட்சத்தை நீதிமன்றத்தில் செலுத்துமாறு பட தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் பிலிம்சுக்கு உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் கே.ஜி.திலகவதி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், விஷாலின் மனுவுக்கு பதிலளிக்கலைகா நிறுவனத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.