ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ஓலைக்குடா கிராமம் அருகில் நரிக்குழி கடல் பகுதியில் நேற்று மரத்தினால் செய்யப்பட்ட மிதக்கும் தேர் ஒன்று கரை ஒதுங்கியது. மிதவை தேரில் இருந்த போர்டில் மியான்மர் நாட்டிலுள்ள கியோகாமி நகரத்தின் ஷின் உபகுத்மா தோரர் நினைவாக பவுர்ணமி நாளன்று நடைபெற்ற திருவிழாவின் தற்காலிக ஆலய தேர் என்று தமிழ் மற்றும் மியான்மர் நாட்டு மொழியில் எழுதப்பட்டுள்ளது.
மரத்தேர் தெப்ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளதால், கடலில் மிதந்து பல மைல் தூரத்திற்கு பயணம் செய்து இறுதியாக ராமேஸ்வரம் கடல் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது. மிதவைத்தேரில் ஒரு சிறிய சிலை மட்டுமே உள்ளது. கரை ஒதுங்கிய தேரை இப்பகுதி மக்கள் மற்றும் மீனவர்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். தேர் குறித்து ராமேஸ்வரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.