ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊர்க் காவல் படை மற்றும் மீனவர் இளைஞர் கடலோர பாதுகாப்பு படைக்கு ஆட்கள் சேர்ப்பு நடைபெற உள்ளது. இது குறித்து ராமநாதபுரம் எஸ்.பி அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது. ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி உத்திரவின்படி ராமநாதபுரம் மாவட்ட ஊர்க் காவல் படை (ஆண்கள் மற்றும் பெண்கள்) மற்றும் மீனவர் இளைஞர் கடலோர பாதுகாப்பு படைக்கு (ஆண்கள் மட்டும்) ஆட்சேர்ப்பு நடக்க உள்ளது.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வளாகம் அருகே அமைந்துள்ள ஆயுத படை மைதானத்தில் வருகின்ற 17 -2 -2024 அன்று ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்பவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் ,நல்ல உடல் தகுதி பெற்றிருப்பவராக இருக்க வேண்டும். மேலும் பத்தாம் வகுப்பு கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.
ஊர் காவல் படை மற்றும் மீனவர் இளைஞர் கடலோர பாதுகாப்பு படைக்கு பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் இந்த தேர்வில் கலந்து உள்ள வரும்போது ,பள்ளி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவை ஒரிஜினல் மற்றும் நகல்,இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் கொண்டு வர வேண்டும். இந்த பணிகளுக்கான விண்ணப்ப படிவம் 5-2-2024 முதல் ராமநாதபுரம் ஆயுதப்படையில் இயங்கி வரும் ஊர்க்காவல் படை பிரிவில் வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 11.2.2024க்குள் ஒப்படைக்க வேண்டும். மீனவர் இளைஞர் கடலோர பாதுகாப்பு பணிக்கு ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என தெரியபடுத்தப்பட்டுள்ளது.