ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே சபர்மதி – ஆக்ரா விரைவு ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. சபர்மதியில் இருந்து புறப்பட்ட பயணிகள் விரைவு ரயில், அஜ்மீர் அடுத்துள்ள மடா ரயில் நிலையம் அருகே சென்று கொண்டு இருந்த போது, நள்ளிரவு 1 மணி அளவில் திடீரென தடம் புரண்டது. இதில் எஞ்சின் மற்றும் 4 புதுப்பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன. இதில் நல்வாய்ப்பாக யாரும் உயிரிழக்கவில்லை. ரயில் தடம் புரண்டதற்கு சிக்னல் அல்லது தொழில்நுட்பக் கோளாறு தான் காரணம் ஆகும்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உடன் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். உடனடியாக ரயில் பெட்டிகளை மீட்கும் பணிகளை தொடங்கினர். இந்த விபத்தால் அவ்வழியாக இயக்கப்பட இருந்த 6 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. 2 ரயில் சேவை மாற்றுப் பாதைக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இந்த விபத்து குறித்து விசாரிக்க 3 நபர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருப்பதாக அஜ்மீர் ரயில் நிலைய மேலாளர் ராஜீவ் தங்கர் கூறியுள்ளார்.