ஐதராபாத்: இந்தியாவின் பிரியாணி தலைநகரமாக ஐதராபாத் நகரம் உருவெடுத்துள்ளது. நம் நாட்டில் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து வயதினருக்கும் பிடித்த உணவாக இருக்கும் பிரியாணி இதர உணவுகளை விட கடைகளில் அதிகம் ஆர்டர் செய்யப்படும் உணவாகவே உள்ளது. சராசரியாக ஒரு நொடிக்கு இரண்டரை பிரியாணி வரை ஆர்டர் செய்யப்பட்டு வருவது சுவிக்கி (Swiggy) நிறுவனத்தின் வருடாந்திர ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இதிலும் குறிப்பாக தெலுங்கான தலைநகர் ஐதராபாத்தில் தான் அதிகளவில் பிரியாணி விற்பனையாகி உள்ளது.
கடந்த ஓராண்டில் ஐதராபாத் நகரத்தில் மட்டும் 1 கோடியோ 30 லட்சம் பிரியாணிகள் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக சிக்கன் பிரியாணியும், அதற்கு அடுத்தப்படியாக வெஜ் பிரியாணியும் ஆர்டர் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்திற்கு அடுத்தப்படியாக கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு கோடி பிரியாணிகள் கடைகளில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. 50 லட்சம் பிரியாணி ஆர்டர்களுடன் 3-வது இடத்தில் சென்னை இருப்பதும் தெரிய வந்துள்ளது.