சென்னை: ரயில்வே நிர்வாக குளறுபடியால் தான் கோர விபத்து நடந்துள்ளது என்றும், இதற்கு பொறுப்பேற்று ஒன்றிய ரயில்வே அமைச்சர் பதவி விலகுவது தான் சரியான அணுகுமுறை என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஒடிசாவில் 3 ரயில்கள் மோதி நடந்த கோர விபத்து ரயில்வே நிர்வாக குளறுபடியினால் தான் ஏற்பட்டது என்பதை எவரும் மறுக்க இயலாது. புல்லட் ரயில், வந்தே பாரத் ரயில் என கோடிக்கணக்கான ரூபாயை செலவழிக்கிற பாஜ அரசு, ரயில் விபத்துகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உரிய நிதியை ஏன் ஒதுக்கவில்லை. ஒடிசாவில் ஏற்பட்ட கோர விபத்திற்கு இன்றைய ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பொறுப்பேற்று தமது பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டும். இந்த ரயில் விபத்திற்கு உரிய பொறுப்பை அவர் ஏற்கிற வகையில் பதவி விலகுவது தான் சரியான அணுகுமுறையாக இருக்க முடியும்.