புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி பதவி வழங்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மோடி குடும்ப பெயர் விவகாரம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் கடந்த மார்ச் 24ம் தேதி தீர்ப்பளித்தது. உடனடியாக ராகுலின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. மேல்முறையீடு மனுவில் இந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. அதைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி ராகுலின் தகுதிநீக்கத்தை ரத்து செய்து மீண்டும் எம்பி பதவி வழங்கி மக்களவை சபாநாயகர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து லக்னோவை சேர்ந்த வக்கீல் அசோக் பாண்டே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் தண்டனை ரத்து செய்யப்படாத வரை ராகுல் எம்பியாக தேர்வு செய்யப்படவோ, எம்பியாக இருக்கவோ தகுதியற்றவர் என்றும், அவருக்கு மீண்டும் பதவி வழங்குவதும், எம்பியாக செயல்பட அனுமதிப்பதும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 102ன் கீழ் 8(3)ஐ மீறுவதாக மனுதாரர் கூறி உள்ளார்.