நாகர்கோவில்: நாகர்கோவிலில் நேற்று பாஜ, காங்கிரஸ் நிர்வாகிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இதில் 4 பேர் காயம் அடைந்தனர். இதை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். குமரி மாவட்டத்திலும் காங்கிரசார் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி படத்தை வைத்து சுடுகாட்டில் காங்கிரசார் மொட்டை அடித்தும், தீப்பந்தம் ஏந்தியும் போராட்டம் நடத்தினர்.
இதுதொடர்பாக பாஜகவினர் காங்கிரஸ் மீது புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி லாரன்ஸ், கிழக்கு மாவட்ட தலைவர் டைசன் ஆகியோர் தலைமையில் 30க்கும் மேற்பட்ட காங்கிரசார் கலெக்டர் அலுவலக ஜங்ஷனிலிருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில் ஊர்வலமாக சென்றனர். அப்போது பாஜ அலுவலகத்தின் முன்பு அமர்ந்து மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர் காங்கிரசார் பாஜ அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாஜ நிர்வாகிகள் கூட்டம் நடந்து கொண்டு இருந்தது. அங்கிருந்தவர்கள் காங்கிரசாரை தடுக்க முயன்றனர்.
இதில் அவர்களுக்கு இடையே மோதல் எற்பட்டது. பின்னர் இருதரப்பினரும் மாறிமாறி கற்களை கொண்டு தாக்கினர். பாஜ அலுவலக மாடியில் இருந்தும் கற்களை வீசினர். இதனால் அந்த இடம் போர்க்களம் போல் காட்சி அளித்தது.
இந்த நிலையில் காங்கிரசார் பாஜகொடியையும், பாஜவினர் காங்கிரஸ் கொடியையும் எரித்ததாக கூறப்படுகிறது. இந்த மோதலில் பாஜக நிர்வாகிகள் கிருஷ்ணன், ஜெகநாதன் காங்கிரஸ் நிர்வாகிகள் லாரன்ஸ், டைசன் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த பாஜவினர் நாகர்கோவில் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி மற்றும் பாஜ மாவட்ட தலைவர் தர்மராஜ் ஆகியோர் தலைமையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜ.மாநில செயலாளர் மீனாதேவ், பொருளாளர் முத்துராமன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போலீசார் வந்து போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘பிரதமர் படத்தை வைத்து மொட்டை அடித்த காங்கிரசாரை இதுவரை கைது செய்யவில்லை. பாஜ அலுவலகத்தை முற்றுகையிட்டு தாக்க முயன்றவர்களை உடனே கைது செய்ய வேண்டும். அ
துவரை நாங்கள் மறியல் போராட்டத்தை கைவிடமாட்டோம்’ என பாஜவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் பாஜ அலுவலகத்தை தாக்க முயன்றவர்களை நாளை(இன்று)கைது செய்வோம் என உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். மறியல் ஈடுபட்ட எம்.ஆர். காந்தி எம்எல்ஏ கூறுகையில், ‘காங்கிரசாரை கைது செய்யாவிட்டால் அடுத்த கட்ட போராட்டங்கள் நடத்தப்படும்’ என்றார். இதனிடையே காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.