தென்னையில் கொக்கோ, மிளகு போன்ற பயிர்களை ஊடுபயிர்களாக பல இடங்களில் சாகுபடி செய்து வருகிறார்கள் விவசாயிகள். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த குருந்தன்கோடு பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் என்பவர் தனது தென்னந்தோப்பில் கேழ்வரகை ஊடுபயிராக சாகுபடி செய்து அசத்தி இருக்கிறார். சோதனை முறையில் பயிரிட்ட கேழ்வரகு நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாராக இருக்கிறது. அறுவடைக்கு முன்னதாக நம்மை அழைத்து விவரம் தெரிவித்த தேவதாசை அவரது நிலத்திற்கே சென்று சந்தித்தோம். “ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறையில் போக்குவரத்து அதிகாரியாக கேரளாவில் வேலை செய்துவந்தேன். தற்போது ஓய்வு பெற்றுவிட்டேன். ஓய்வுக்கு முன்பே கடந்த 2000ம் ஆண்டில் இருந்து விவசாயம் செய்துவருகிறேன். ராமநாதபுரம் அருகே உள்ள சேனாப்பள்ளியில் எனக்கு ஒன்றரை ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. அரசு அவ்வப்போது அறிவிக்கும் புதுப்புது வேளாண் திட்டங்களை எனது நிலத்தில் பரீட்சார்த்த முறையில் செயல்படுத்திப் பார்ப்பேன். அதன்படி எனது விளைநிலத்தில் பண்ணைக்குட்டை அமைத்திருக்கிறேன். தற்போதுள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தில் ஒன்றேகால் ஏக்கரில் தென்னை சாகுபடி செய்திருக்கிறேன். தென்னந்தோப்பைச் சுற்றி தேக்கு, ஈட்டி, செம்மரம், மகோகனி உள்ளிட்ட மரங்களை சாகுபடி செய்திருக்கிறேன். இந்த மரங்கள் ஒரு குறிப்பிட்ட வருடங்கள் கடந்த பிறகு கண்டிப்பாக நல்ல பலனைக் கொடுக்கும். இதேபோல வீட்டிற்குத் தேவையான நல்லமிளகு மற்றும் அன்னாசிப்பழங்களை எனது நிலத்தில் சாகுபடி செய்திருக்கிறேன்.
இந்த ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஒன்றிய, மாநில அரசுகள் சிறுதானியப் பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு ஊக்கம் அளித்து வருகின்றன. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியப் பகுதி களிலும் விவசாயிகளைத் தேர்வு செய்து கேழ்வரகு சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் குருந்தன்கோடு ஒன்றியப் பகுதியில் எனது தென்னந்தோப்பில் கேழ்வரகு சாகுபடி செய்ய வேளாண்மைத்துறை பரிந்துரை செய்தது. அதன்படி நான் கேழ்வரகை சாகுபடி செய்திருக்கிறேன். மொத்தம் 5 கிலோ விதையைத் தென்னைகளுக்கு இடையில் ஊடுபயிராக விதைத்தேன். பாசனம் செய்ய வசதியாக இடையிடையே பாத்திகளை அமைத்தேன். தொடர்ந்து, வேளாண்மைத்துறையின் சார்பில் பரிந்துரைக்கப்படும் இயற்கை உரங்களைக் கொடுத்து, தண்ணீர் பாய்ச்சியதால் பயிர் நன்றாக வளர்ந்திருக்கிறது. 20ம் நாளில் களைக்கொத்து மூலமாக களைகளைக் கொத்திவிட்டு, பயிரைக் கொஞ்சம் வாடவிட்டு, மீண்டும் உரம் கொடுத்து, தண்ணீர் பாய்ச்சினோம். ஒவ்வொரு முறையும் பயிரை வாட விட்டுத்தான் பாசனம் செய்ய வேண்டும்.
அதிகமாக பாசனம் செய்தால் வேர் களில் ஈரம் தங்கி, பயிர் வெளுப்படைந்து, தாள் அடர்த்தி குறைவதுடன் தூர்களும் பெருக்காது. பொதுவாக கேழ்வரகுச் செடியில் பூச்சித்தாக்குதல் இருக்காது என்பதால் பூச்சிக்கொல்லிகள் எதுவும் தேவைப்படாது. விதைத்ததில் இருந்து 40 நாட்களுக்குப் பிறகு செடிகளில் கதிர் வர ஆரம்பிக்கும். 60 நாட்களுக்கு மேல் கதிர் முற்ற ஆரம்பிக்கும். கதிர் வெளிவந்த பிறகு, இரண்டு முறை பாசனம் செய்தால் போதும்.கதிர் பச்சை நிறத்திலிருந்து பழுப்பு நிறத்துக்கு மாறத் தொடங்கும் சமயத்தில் அறுவடை செய்யலாம். அறுவடை செய்த கதிரை ஒரு நாள் மூடிவைத்து, அடுத்த நாள் பிரித்து எடுத்தால் கேழ்வரகு கிடைக்கும். இதற்கு தண்ணீர் அதிகம் தேவைப்படாது. இருப்பினும் தேவைக்கு ஏற்ப எனது நிலத்தில் உள்ள கிணறு, ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் பாய்ச்சுவேன். களைகள் வராமல் தொழிலாளர்களைக் கொண்டு களைகளை அகற்றி வந்தேன். ஆனால் குமரி மாவட்டத்தில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் கேழ்வரகுப் பயிர்கள் மண்ணில் சரிந்தது. மேலும் களைகளும் அதிகமாக முளைத்தது. இருப்பினும் கேழ்வரகுப் பயிர்களில் அதிக விளைச்சல் இருக்கிறது” என்று கூறிய அவர் மேலும் தொடர்ந்தார்.
“கேழ்வரகுப் பயிர்களை தற்போது அறுவடை செய்ய இருக்கிறேன். நான் சாகுபடி செய்துள்ள கேழ்வரகுப் பயிரில் கடைசி நேரத்தில் மழை பெய்யாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக ஆயிரம் கிலோ மகசூல் கிடைத்திருக்கும். ஆனால் மழை பெய்து கெடுத்துவிட்டது. இதனால் 200 கிலோ குறைந்து 800 கிலோ மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி ரூ.25 லிருந்து ரூ.40 வரை கேழ்வரகுக்கு விலை கிடைக்கிறது. இதனை சராசரியாக ரூ.35க்கு விற்பனை செய்தால் ரூ.28 ஆயிரம் வருமானமாக கிடைக்கும் என நினைக்கிறேன்.
இதில் களை எடுக்கும் கூலி செலவு ரூ.2 ஆயிரம் போக ரூ.26 ஆயிரம் லாபமாக கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. குமரி மாவட்டம் நீர் நிறைந்த பகுதி என்பதால் வயல்களில் கேழ்வரகு பயிரிட முடியாது. ஆனால் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ள விளைநிலங்களில் இதைப் பயிரிட்டு, உபரி வருமானம் பார்க்கலாம். ஒன்றேகால் ஏக்கரில் 25 அடிக்கு ஒரு மரம் என தென்னையை நடவு செய்திருக்கிறேன். இதில் கிடைக்கும் தேங்காயை 2 வாரத்திற்கு ஒருமுறை அறுவடை செய்கிறேன். இதனை வியாபாரிகளுக்கு நேரடியாக விற்பனை செய்கிறேன். இதன்மூலம் மாதத்திற்கு ரூ.3 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது. குமரி மாவட்டத்தில் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி நடந்து வருகிறது. இந்த தென்னந்தோப்புகளில் ஊடுபயிராக சிறுதானியப் பயிர்களை சாகுபடி செய்து அதிக லாபத்தை விவசாயிகள் பெறலாம். நான் எனது தென்னந்தோப்பில் சிறுதானியப் பயிர்களை சாகுபடி செய்ய முடிவு செய்திருக்கிறேன். சந்தையில் கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் விவசாயிகள் இதை தாராளமாக சாகுபடி செய்ய முன்வரலாம். இதனால் அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைப்பது உறுதி’’ என தீர்க்கமாக பேசுகிறார் தேவதாஸ்.
தொடர்புக்கு:
தேவதாஸ் – 99522 81192.
பசுந்தாள் உரம்
தேவதாஸ் தனது நிலத்தில் சாகுபடி செய்யும்போது உரம் எதுவும் பயன்படுத்து வதில்லை. அதற்குப் பதிலாக பசுந்தாள் உரங்களைப் பயன்படுத்திக்கொள்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “கேழ்வரகுப் பயிரை கடந்த செப்டம்பர் சாகுபடி செய்தேன். இந்தப் பயிர் 4 மாத பயிராக உள்ளது. எனது நிலத்தில் 6 மாதத்திற்கு ஒருமுறை சணப்பு, தக்கைப்பூண்டு போன்றவற்றை சாகுபடி செய்து 2 மாதத்தில் உழவுப்பணியை மேற்கொள்வேன். தக்கைப்பூண்டு, சணப்பு ஆகியவை விவசாய நிலத்திற்கு பசுந்தாள் உரமாகப் பயன்பட்டு வருகிறது. கேழ்வரகுப் பயிர்களை அறுவடை செய்தவுடன், விளைநிலத்தை உழுது, சணப்பு, தக்கைப்பூண்டு விதைகளை விதைத்து, 2 மாதத்தில் மீண்டும் உழுதுவிட்டு வேறு பயிர்களை சாகுபடி செய்வேன். பயிர்களுக்கென்று வேறு உரங்களை நான் பயன்படுத்தவது கிடையாது’’ என்கிறார்.