சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல் வரலாற்றுத் திரிபு வாதங்களை செய்வதோடு, தமிழக மக்களின் நலன்களுக்கு விரோதமாகவும், தமிழ் கலாசாரத்தை சிறுமைப்படுத்துகிற வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழாவை கவர்னர் மாளிகையில் கொண்டாடுகிற போர்வையில் மகாத்மா காந்தியை கொச்சைப்படுத்துகிற வகையில் கருத்துகளை கூறியிருக்கிறார். 150 ஆண்டு கால பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கத்தியின்றி, ரத்தமின்றி, அகிம்சையில் வழியில் போராடித் தான் வெற்றி பெற முடியும் என்ற மகாத்மா காந்தியின் அணுகுமுறை மூலமாகத் தான் இந்தியா விடுதலை பெற்றது. ஆனால், இந்திய விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு வகிக்காமல், ஒரு துரும்பை கூட போடாமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கைப்பாவைகளாக இருந்தவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ்., இந்துமகாசபை வழிவந்த பாஜகவினர்.
சுதந்திரம் பெற்று 52 ஆண்டுகள் வரை நாகபுரியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுத்த தேசபக்தியே இல்லாத ஒரு பாசிச இயக்கம் தான் பாஜக என்ற கரைபடிந்த வரலாறை எந்த சக்தியாலும் துடைக்க முடியாது. இதன்மூலம் ஆர்.என்.ரவி போன்றவர்கள் செய்கிற வரலாற்று புரட்டுகளை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.