தாம்பரம்: குரோம்பேட்டை ராதாநகர் சுரங்கப்பாதை பணியை பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி தலைமையில் மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, விரைவில் அனைத்து பணிகளையும் முடித்து சுரங்கப்பாதையை பயன்பாட்டிற்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, எம்எல்ஏ உத்தரவிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:
ராதாநகர் சுரங்கப்பாதை பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு மே மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். ராதா நகர் ரயில்வே கேட்டை போன்று, வாகனங்கள் அதிகம் பயன்படுத்தும் வைஷ்ணவா கல்லூரி ரயில்வே கேட்டில் கனரக வாகனங்கள் செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்து. இதுதொடர்பாக சமீபத்தில் கூட கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், ராதா நகர் சுரங்கப்பாதை திட்டம் முடிந்தவுடன், வைஷ்ணவா கல்லூரி ரயில்வே கேட்டில் 30 கோடி ரூபாய் செலவில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது.
இந்த சுரங்கப்பாதை கனரக வாகனங்களை தவிர்த்து மற்ற வாகனங்கள் சென்று வரும் வகையில் இரு வழிப்பாதையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். சுமார் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் குரோம்பேட்டை, ராதா நகர் சுரங்கப்பாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதால் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.