வேளச்சேரி: நூக்கம்பாளையம் சாலையைச் சேர்ந்தவர் பாமினி விசித்ரா (35). இவரது செல்போனுக்கு சில நாட்களுக்கு முன் குறுஞ்செய்தி வந்தது. அதில் தனியார் நிறுவனத்தின் பெயரை கூறி, ஆன்லைன் டாஸ்க் என்ற தங்களது வணிகத்தில் ரூ.2 ஆயிரம் செலுத்தினால் சில நாட்களில் இரட்டிப்பாக ரூ.4 ஆயிரம் தருவோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை நம்பிய அவர், ரூ.2 ஆயிரம் ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார். சில நாட்கள் கழித்து அவரது அக்கவுண்டில் இரண்டு மடங்காக ரூ.4 ஆயிரம் கிரெடிட் ஆனது. இதனால் அந்த நிறுவனத்தை நம்பி தொடர்ந்து 7 முறை ஆயிரக்கணக்கான பணத்தை செலுத்தி இரட்டிப்பாக பணத்தை பெற்றுள்ளார். இதனால் அந்த நிறுவனத்தின் மீது முழு நம்பிக்கை ஏற்பட்டதால் அவர் ரூ.14 லட்சத்து 87 ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.
சில நாட்கள் ஆன நிலையில், இரட்டிப்பான தொகை வங்கிக் கணக்கில் வரவில்லை. இதையடுத்து அவர் ஏற்கனவே தொடர்பில் இருந்த செல்போனை தொடர்பு கொள்ள முயற்சித்தார். அப்போது அந்த செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த விசித்ரா, சம்பவம் தொடர்பாக பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் . போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.