புதுடெல்லி: நடப்பு ரபி பருவ பயிர்களுக்கு பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு ரூ.22,303 கோடி மானியம் வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
உலகளவில் உரங்களின் விலை அதிகரித்துள்ள போதிலும், விவசாயிகள் தொடர்ந்து நியாயமான விலையில் மண்ணில் சத்துக்களைப் பெறுவதை உறுதி நடப்பு ரபி பருவத்தில் (கடந்த அக்டோபர் 1 முதல் 2024 மார்ச் 31 வரை) பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு ரூ.22,303 கோடி மானியம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டி-அம்மோனியம் பாஸ்பேட் உரம் ஒரு மூட்டை (50 கிலோ) ரூ.1,350 என்ற பழைய விலையில் தொடர்ந்து விற்பனை செய்யப்படும். மியூரேட் ஆப் பொட்டாஷ் (எம்ஓபி) உரத்தின் விலை குறையும்.
மேலும், உத்தராகண்ட் மாநிலத்தின் ஜம்ரானி அணை கட்டும் திட்டத்தை பிரதமரின் வேளாண் பாசனத் திட்டம் – விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன நன்மைத் திட்டத்தில் சேர்க்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.2,584.10 கோடியில் கட்டப்படும் இந்த அணை 2028ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக உத்தராகண்ட் மாநிலத்திற்கு ரூ.1,557.18 கோடி ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.