பாட்னா: வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலால் 200 ஆசிரியர் பணி தேர்வர்களை கைது செய்து பீகார் போலீசார் விசாரித்து வருகின்றனர். பீகார் மாநிலத்தில் ஆசிரியர் பணிக்கான தேர்வு நேற்று நடந்தது. அதற்கு முன்னதாக தேர்வு வினாத்தாள் கசிந்தாக தகவல் வெளியானது.
குறிப்பாக ஹசாரிபாக் பகுதியில் இருக்கும் ஓட்டல் ஒன்றில் இருந்து தேர்வு வினாத்தாள் கசிந்ததாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து அந்த ஓட்டலில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கிருந்து 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணிக்கான தேர்வர்கள் வெளியே வந்தனர். அவர்களது கையில் மாதிரி வினாத்தாள்கள் இருந்தது.
அதுமட்டுமின்றி அந்த வினாத்தாளை கையில் வைத்துக் கொண்டு தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் அனைவரையும் தேர்வு மையத்துக்குள் நுழைவதற்கு முன்பே போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் கையில் வைத்திருந்த வினாத்தாளும், தேர்வின் வினாத்தாளும் ஒரே மாதிரியாக உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இதுகுறித்து ஹசாரிபாக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் குமார் கூறுகையில், ‘200 தேர்வர்களை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளோம். அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட வினாத்தாள்கள், தேர்வின் வினாத்தாள்களுடன் பொருந்துகிறதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது’ என்றார்.