திருவொற்றியூர்: நிதி ஒதுக்கப்பட்டும் கிடப்பில் போடப்பட்டதால், விரைவில் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட பெரியமேட்டு பாளையம் தெருவில் தினமும் குடிநீர் லாரி, கார், பைக் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படமல் விட்டதால் ஆங்காங்கே பழுதாகி குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்படுவதோடு, இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் இந்த சாலை வழியாக செல்லும் போது பழுதாகி நின்று விடுவதால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.
இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று வார்டு கவுன்சிலர் சரண்யா கலைவானன், திருவொற்றியூர் மண்டலக் குழு கூட்டத்தில் தலைவர் தி.மு.தனியரசிடம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்துரூ.30 லட்சம் செலவில் பெரிய மேட்டுபாளையம் தெரு உள்பட 4 தெருக்களில் சாலையமைக்க டெண்டர் விடப்பட்டது. ஆனால் இந்த தெருவில் இதுவரை தார்சாலை அமைக்கப்படாமல் கிடப்பில் உள்ளது. எனவே திட்டமிட்டபடி பெரியமெட்டு பாளையம் தெருவில் தார் சாலை அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.